Analog Clock

Sunday, January 16, 2011

விழுப்புரம் : ""வரும் சட்டசபை தேர்தலில் எனது தொண்டர்கள் விரும்பினால் அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து போட்டியிடுவேன்,'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திராவிற்கு மறுவாழ்வு கொடுப்போம் என்று பேசியதால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. அவருடன் காங்., கூட்டணி வைத்திருப்பது வேதனைக்குரியது. உழைத்தால் தான் எதையும் பெற முடியும். உழைக்காமலேயே சொத்துகளை குவித்து வைத்துள்ள தி.மு.க.,வினர் ஐந்து மாதங்கள் கழித்து கடும் இன்னல்களை சந்திக்கவுள்ளனர். இந்த தேர்தலில் தொகுதிக்கு 25 கோடி ரூபாய் வரை செலவு செய்து வெற்றி பெற நினைக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் நம்முடைய வரிப் பணத்தை வாங்கி கொண்டு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் கருணாநிதி ஆட்சியில், வெங்காயம் என்ன விலைக்கு கொடுக்கப்படுகிறது. எதற்கெடுத்தாலும் இலவசம் வழங்கும் கருணாநிதியால் நமக்கு இப்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பில்லை என்றால் லோக்சபா கூட்டு குழு விசாரணைக்கு ஏன் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது.

நான் கட்சி ஆரம்பித்தப் பின் தான் கருணாநிதியின் மறுப் பக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. நான் எந்த கட்சியிலிருந்தும் வரவில்லை. சுய மரியாதை இயக்கத்திலிருந்து வந்த கருணாநிதி மஞ்சள் துண்டும், சிவப்புக் கல் பதித்த மோதிரமும் போட்டிருப்பது ஏன். ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இருந்த டாஸ்மாக் கடையில் தற்போது 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதால், இலவசங்களை தாராளமாக வாரி வழங்குகின்றனர். பொங்கல் விழாவிற்கு அனைவரின் வீடுகளிலும் எண்ணெய் விளக்கேற்றினால் மீண்டும் தாங்களே ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கருணாநிதி பகல் கனவு காண்கிறார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும். ஊருக்கெல்லாம் தமிழ் பெயர் வைக்கும் கருணாநிதி, தன் மகன் ஸ்டாலினுக்கு ஏன் பெயர் மாற்றம் செய்யவில்லை. கருணாநிதியிடம் ஒரே ஒரு முன்னேற்றம் என்றால் முன்பெல்லாம் மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவார், தற்போது தந்தி அனுப்புகிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தருவதற்கு பதிலாக லஞ்சம், ஊழலை ஒழிப்போம். படித்தவருக்கு மட்டுமின்றி படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்போம். அன்னை மொழியைக் காப்போம். அனைத்து மொழியையும் கற்க வழி செய்வோம். மின் வசதி இல்லாமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக மோட்டார் வழங்கி பயனில்லை. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

காவல் துறையினரை இந்த ஆட்சி ஏவல் துறையாகப் பயன்படுத்துகிறது. போலீசார்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் ஆட்சியாளர் களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. வரும் சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்று வெற்றிப் பெறுவேன். பன்றியோடு சேர்ந்த கன்று போல இன்று தமிழகத்தில் காங்., கூட்டணி நிலை உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க., விற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர். இவ்வாறு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் பேசினார்.

Monday, January 10, 2011

2001ல் இருந்து தொலை தொடர்பு ஒப்பந்தங்கள் விசாரிக்கப்படும்: சி.பி.ஐ. அறிவிப்பு

புதுடெல்லி, ஜன. 4 -
 
உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி 2001- ம் ஆண்டு முதல் நடைபெற்ற தொலை தொடர்பு சம்பந்தமான ஒப்பந்தங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதில் குற்றவாளிகள் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.
 
குற்றவாளிகளின் பெயர் தெரியாததால் அடையாளமற்றவர் என்ற பெயரில் இன்று முதல்கட்ட விசாரணையை சி.பி.ஐ. பதிவு செய்தது. ஒப்பந்தங்களின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அப்போதிருந்த வாஜ்பாயின் அரசில், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்றும் விசாரிப்பதாக சி.பி.ஐ. வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
 
பிரமோத் மகாஜன், அருண் சௌரி, தயாநிதி மாறன் ஆகிய முன்னாள் தகவல் தொலை தொடர்பு அமைச்சர்கள் நடத்திய சந்திப்புகள், ஒப்பந்தக் கூட்டங்கள் ஆகியவற்றையும் சி.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது.
 
கோப்புகளில் உள்ள ஆவணப்படி, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 50 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாரதி, வோடபோன், ஐடியா ஆகிய ஒப்பந்ததாரர்கள் அதிக பயனை அடைந்துள்ளனர். ஒப்பந்தங்கள் பெற்ற 50 நிறுவனங்களையும் விசாரிக்கப்போவதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
 
டிசம்பர் 16- ந் தேதி உச்சநீதிமன்றம் 2001 - 2007 வரை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் யார் யாருக்கு ஒப்பந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை வருகிற பிப்ரவரி 10- ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ.க்கு ஆணை பிரப்பித்துள்ளது. மேலும் தொலை தொடர்பு ஒப்பந்தங்களால் ஏற்பட்ட இழப்பையும் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதனால் சி.பி.ஐ. தன் விசாரணையை வேகப்படுத்தியுள்ளது.
 
இதுபற்றி முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் அருண் சௌரி கூறுகையில்:  உச்சநீதிமன்றம் ஏன் விசாரணையை 2001 வரை நீடித்துள்ளது என்று குழப்பமாக உள்ளது என தெரிவித்தார்.
 
அருண் சௌரி பா.ஜனதா ஆட்சியில் 2003 ஜனவரி முதல் 2004 மே மாதம் வரை தகவல் தொலை தொடர்பு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ஆ.ராசா மீது புகார்: சுப்பிரமணியசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம்; டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி

புதுடெல்லி, ஜன. 7-
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சுப்பிர மணியசாமி கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நான் கொடுக்கும் புகாரை வழக்காக ஏற்றுக் கொண்டு ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் ஊழல் தடுப்பு சட்ட விதிப்படி என்னை அரசு வக்கீலுக்கு நிகரான வக்கீலாக நியமித்து வாதாட அனுமதிக்க வேண்டும்.
 
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரிக்கும் சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் என்னை விசாரணைக்கு உதவியாக அமர்த்திக் கொள்ள உத்தர விட வேண்டும் என்று கேட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. நீதிபதி பிரதீப் சத்தா இதை விசாரித்தார்.
 
அப்போது சுப்பிரமணிய சாமியும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி பிரதீப் சத்தா “இந்த வழக்கில் நீங்கள் புகார்காரராகவும், அரசு வக்கீலாகவும் ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போட நினைக்கிறீர்கள். இதற்கு அனுமதிக்க முடியாது என்றார். அதற்கு சுப்பிரமணியசாமி நான் இரட்டை வேடம் போட அனுமதி கேட்கவில்லை.
 
இந்த வழக்கை பொறுத்தவரை புகார்காரர் என்ற முறையில் முதலில் சில சாட்சியங்களை சொல்ல விரும்புகிறேன். அதன் பின்னர் குற்றம் செய்தவரிடம் நடக்கும் கோர்ட்டு விசாரணைக்கு உதவி செய்ய விரும்புகிறேன். அதற்காகத் தான் அரசு வக்கீலுக்கு நிகரான வக்கீலாக என்னையும் நியமிக்கும்படி கேட்கிறேன்” என்றார்.
 
அதற்கு நீதிபதி பிரதீப் சத்தா, “உங்கள் வழக்கு தொடர்பாக புகார் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். இது சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடக்கும். நீங்கள் உங்கள் சாட்சியங்களை கோர்ட்டில் அளிக் கலாம். அது பதிவு செய்து கொள்ளப்படும். அதை தொடர்ந்து விசாரணை நடக்கும் மற்ற விஷயங்கள் அடுத்த கட்டங்களாக எடுத்து கொள்ளப்படும்” என்றார். 

ஸ்பெக்ட்ரம் பற்றிய கருத்து சரியல்ல கபில் சிபல், தணிக்கை அறிக்கையை கவனமாக படிக்க வேண்டும்; பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கண்டனம்

கவுகாத்தி, ஜன.9-
 
மத்திய மந்திரி கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி கூறிய கருத்து சரியல்ல. அவர் தணிக்கை அறிக்கையை கவனமாக படித்திருக்க வேண்டும் என்று பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.  
 
கடந்த 2008-ம் ஆண்டு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
அதுபற்றி மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி கபில் சிபல் நேற்றுமுன்தினம் பேட்டி அளித்தார்.
 
அப்போது, தணிக்கை அதிகாரியின் மதிப்பீட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், யூகத்தின் அடிப்படையிலான அவரது மதிப்பீடு முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார்.   இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரணை நடத்தி வரும் பொது கணக்கு குழுவின் தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷியிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர். அதற்கு ஜோஷி கூறியதாவது:-
 
கபில்சிபல் கூறிய கருத்து சரியல்ல. அவர் தணிக்கை அறிக்கையை மிகவும் சாதாரணமாக அணுகி இருக்கிறார். அவர் அந்த அறிக்கையை கவனமாக படித்திருக்க வேண்டும். தணிக்கை அதிகாரி, 3 விதமான வழிமுறைகளில் நஷ்டத்தை மதிப்பிட்டு இருக்கிறார். அதில் ஒன்றுதான், ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி. அதுதான் துல்லியமானது, இறுதியானது என்று தணிக்கை அதிகாரி சொல்லவில்லை. இழப்புத்தொகை, யூகத்தில் அடிப்படையிலானது என்றுதான் அவர் எப்போதும் கூறி வந்திருக்கிறார்.  
 
பொது கணக்கு குழு முன்பு, தொலைத்தொடர்பு செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆஜரானபோது, தணிக்கை அதிகாரியின் மதிப்பீடு தவறானது என்று ஒருபோதும் சொல்லவில்லை. பொது கணக்கு குழு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, கபில் சிபல் இதுபோல சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல. அவர் ஏதாவது சொல்ல விரும்பினால், தொலைத்தொடர்பு செயலாளரை பொது கணக்கு குழுவுக்கு அனுப்பி வைத்து, அவர் மூலமாக சொல்லலாம். கபில் சிபலின் கட்சியான காங்கிரசும் தனது கருத்துகளை பொது கணக்கு குழுவிடம் சொல்லலாம்.
 
இவ்வாறு ஜோஷி கூறினார்.

ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

புதுடெல்லி, ஜன 10-
 
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை குழு கூறியது.
 
இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
 
இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இன்று மீண்டும் அதன் விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதி ஏ.கே. கங்குலி ஒதுக்கீடு பெற்ற டாடா டெலி சர்வீஸ், ஷியாம், வீடியோகான், எடிசலாட், யுனினார், புஷ்நெட், வோடா போன் உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
 
இதே போல் மத்திய அரசு மற்றும் மத்திய டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
 
பின்னர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 1-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.

Sunday, January 9, 2011

ஆட்சி அமைந்தால் வேலிகள் தூள் தூள்: ஜெ.,தேர்தல் முழக்கம்

நாகர்கோவில் : ""தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட, அய்யா வழி பக்தர்கள் துணை நிற்க வேண்டும்,'' என, கன்னியாகுமரி சாமித் தோப்பில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்து காரில் சாமித் தோப்பு வந்த ஜெ.,க்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. கோவிலின் பள்ளியறையில் சாமி தரிசனம் செய்தார்.அங்கு, அவருக்கு வழங்கப்பட்ட நாமத்தை நெற்றியில் பூசிக்கொண்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், கொடிமரம் முன் நின்று வழிபட்டார். கோவிலில் கோசாலையை துவக்கி வைத்து பசு, கன்றுக் குட்டியை தானமாக வழங்கினார். அவற்றிற்கு வாழைப்பழங்களை கொடுத்தார்.

பின்னர், மேடையில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், நிதியுதவிகளை உதவிகளை வழங்கி பேசியதாவது: விண்ணுலகும், மண்ணுலகும் வியக்கும் வகையில் அவதரித்தவர் அய்யா வைகுண்டர் பதி. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னையே அர்ப்பணித்த வைகுண்டபதிக்கு என்னை அழைத்த தலைமை குரு பாலபிரஜாபதிஅடிகளாருக்கு நன்றி.தீண்டாமையை வேரோடு ஒழிக்கவும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை மக்களுக்கு உணர்த்தவும், சமபந்தியை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவரும், சுயமரியாதைக்கு வித்திட்டவரும், சமூக நீதிக்காக போராடியவரும், தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அற்புதமான மார்க்கத்தை ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்டர். அவரை தமிழ் சமூகம் என்றென்றும் நினைவு கூறும். அய்யா வழி வழிபாட்டில் உருவம் கிடையாது. கண்ணாடி மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். கண்ணாடியில் தூசு படிந்தால் நமது பிம்பம் பிரதிபலிக்காது. அதே போல பொது வாழ்க்கையில் தூசுபடியாமல் தூய்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு யுகத்திலும் அதர்மம் தலை தூக்கி, தர்மம் குன்றும் போது அவதார புருஷர்களாக, இறைவன் தோன்றுவது வழக்கம்.அதைப் போல, இந்த கலியுகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டவே அவதரித்தவர், அய்யா வைகுண்டர். தர்மம் என்றால் அறம் என்று பொருள். பிறருக்கு உதவும் மனித நேயத்தை விதைத்தவர் அவர். ஆனால், நாட்டு மக்களை சுரண்டி சேர்த்தப் பணத்தில், தம் வாழ் நாளில் ஒரு விழுக்காட்டை கூட கொடுக்க மனமில்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு பன்றி, ஒரு பசுவிடம் நியாயம் கேட்டது. "என்னை கொன்று இறைச்சியை உண்கிறார்கள். ஆனால், உயிரோடு இருக்கும் போது என்னை புறக்கணிக்கிறார்கள். உன்னை மட்டும் வழிபடுகிறார்களே', என கேட்டது.அதற்கு பசு,"எனக்கும் உனக்கும் வேறுபாடு உள்ளது. நான் உயிரோடு இருக்கும் போது மக்களுக்கு பால், தயிர்,வெண்ணெய் வழங்குகிறேன். நீ செத்த பிறகு தான் இறைச்சி தருகிறாய்,' என கூறியது. செய்யும் தர்மத்தை உயிருடன் இருக்கும் போதே செய்ய வேண்டும்.இன்றைக்கு கொலை, கொள்ளை, சுரண்டல், கற்பழிப்பு, சூழ்ச்சி போன்ற இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, தர்மத்தை நிலை நாட்ட எனக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். மீண்டும் கழக ஆட்சி அமைய துணை நில்லுங்கள்.அய்யா வைகுண்டபதியின் நிலம் வேலியிடப்பட்டிருப்பதாக, பால பிராஜபதி அடிகள் தெரிவித்தார். அய்யா வைகுண்டரின் அருளால் கழக ஆட்சி அமைந்தால், எல்லா வேலிகளும் தகர்த்தெறியப்படும். இந்த தேர்தல் நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கும் தேர்தல். வைகுண்டர் அருளால் கழக ஆட்சிஅமைந்தால், மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தமிழக எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் சஸ்பெண்ட்; சபாநாயகரை கேலி செய்து எதிர்கட்சியினர் நாடகம்

சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சட்டசபை யில் கவர்னர் உரையின்போது பெரும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்ட 9 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வரும் சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் 9 பேரும் கலந்து கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனை கண்டித்து எதிர்கட்சியினர் சபாநாயகரை கேலி செய்யும் விதமாக நாற்காலியில் அமர்ந்து கேலி செய்தனர்.
கவர்னர் உரையில் கூச்சல் - குழப்பம் : 7ம்தேதி நடந்த சட்டசபையில் கவர்னர் பர்னாலா கவர்னர் உரை துவங்கியதும் , விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கூச்சல் , குழப்பம் நிலவியதால் இடையூறு செய்யும் எம்.எல்.ஏ.,க்களை சபையில் இருந்து வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபாநாயகர்உத்தரவிட்டடார்.
குண்டு கட்டாக வெளியேற்றும் போது அ.தி.மு.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் காவலர்களை அடிக்க பாய்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க., ம.தி.மு.க., மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவை முன்னவர் தீர்மானம் : இன்று (திங்கட்கிழமை) அவையில் கவர்னர் மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கவர்னர் உரையின்போது அவைக்காவலர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சரும், அனை முன்னவருமான அன்பழகன் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட சபாநாயகர் ஆவடையப்பன் அ.தி.மு.க., வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., ம.தி.மு.க., மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.,க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

எம்.எல்.ஏ.,க்கள் 9பேர் யார் ? : சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பெயர் விவரம் வருமாறு: பொள்ளாச்சி ஜெயராமன், பாண்டுரங்கன், டி.ஜெயக்குமார், வேலுச்சாமி, திருத்தணி ஹரி, ரவிச்சந்திரன், எஸ்.எஸ்., கிருஷ்ணமூர்த்தி், செந்தில் பாலாஜி, சீனி சண்முகம் ஆகியோர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவவடிக்கையில் பங்கேற்க முடியாது.

தர்ணா போராட்டம் : சஸ்பெண்ட் ரத்து செய்ய வேண்டும் என்றும், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். தொடர்ந்து வெளியேறிய எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு செல்லும் வழியில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

சபாநாயகரை கிண்டல் செய்யும் டிராமா: தர்ணாவிற்கு பின்னர் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் சபாநாயகர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை கேலி செய்யும் விதமாக எம்.எல்.ஏ.,க்கள் நடித்துக்காட்டினர். சேரில் ஜெயக்குமார் ( சபாநாயகர் போல் ) அமர்ந்து கொள்ள, எம்.எல்.ஏ.,க்கள் முறையிட பின்னர் பதில் கூற என நடித்து அனைவரும் கைத்தட்டி சிரித்து ரசித்துக்கொண்டனர். மேலும் முதல்வர் கருணாநிதி பதில் சொல்வது போலவும் நடித்துக்காட்டினர்.