Tuesday, April 13, 2010

கொச்சி அணியில் சசிதரூரின் வருங்கால மனைவி பங்குதாரர்?: சானியா போல அமைச்சருக்கும் நெருக்கடி

புதுடில்லி: ஐ.பி.எல்., கொச்சி அணியை வாங்கிய ரெண்டஸ்வாஸ் நிறுவனம் பங்குதாரராக சசிதரூர் திருமணம் செய்யவிருக்கும் காஷ்மீர் பெண் ஒருவர் இருப்பதாகவும், இது தொடர்பாக ஐ.பி.எல்., சேர்மன் லலித்மோடிக்கும், மத்திய அமைச்சருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியில் சமீபத்தில் கொச்சி , புனே அணி ஏலம் விடபட்டது. இதில் கொச்சி அணி இது வரை இல்லாத அளவிற்கு அதிகப்பட்சமாக ரூ. 1533 கோடிக்கு ஏலம் போனது. இந்த அணியில் யார் ? யார் ? பங்குதாரர்களாக இருக்கின்றனர் என லலித்மோடி ட்விட்டரில் கூறியிருந்தார். இதன் படி கிஷன் சைலந்தேர், புஷ்பா கெய்வாட், சுனந்தாபுஷ்கர், பூஜா, குலாத்தி , ஜெயந்த் கோத்தல்வார், விஷ்ணு பிரசாத், சந்தீப் அகர்வால், ஆகியோர் பெற்றிருக்கிறார்கள் என தெரிவித்திருந்தார். இது தொடர்பான விவரம் அளிக்ககூடாது என நிர்பந்தம் தரப்படுகிறது இது என்ன காரணம் என தெரியவில்லை.

லலித்மோடி வெளியிட்டது சட்டத்திற்கு விரோதமானது : இந்த அணியின் பங்குதாரர்களில் ஒருவரான சுனந்தா புஷ்கர் காஷ்மீரை சேர்ந்தவர். இவர் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் சசி தரூர் 3 வதாக திருமணம் செய்யவிருக்கும் பெண் ஆவார். சுனந்தா குறித்து விஷயங்கள் வெளியிட வேண்டாம் என மத்திய அமைச்சரிடம் இருந்து நெருக்கடி வந்திருக்கும் என யூகங்கள் தெரிவிக்கிறது. ஏலம் நடந்தபோதும் போனில் தொடர்பு கொண்டு நெருக்கடி சசி தரூர் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ரகசியமாக வைத்திருக்க வேண்டிய பங்குதாரர்கள் பெயரை லலித்மோடி வெளியிட்டது சட்டத்திற்கு விரோதமானது என்றும் இது குறித்து வழக்கு தொடரப்படும் என ரெண்டஸ்வாஸ் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் சசி தரூர் லலித் மோடியை நிர்பந்தம் செய்தாரா இதில் இவரது பங்கு உண்டா என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இந்த பிரச்னை மத்திய அரசுக்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பி.சி.சி.ஐ., சுக்லா - சோனியா சந்திப்பு : இந்நிலையில் பி.சி.சி.ஐ., செய்தி ‌தொடர்பாளர் ராஜிவ்சுக்லா காங்., தலைவர் சோனியாவை இன்று ( செவ்வாய்க்கிழமை ) சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில் ; ஐ.பி.எல்., தலைமை குழு கூட்டம் இன்னும் 10 நாளில் நடக்கவிருக்கிறது இதில் முக்கிய பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். அதே நேரத்தில் சசி தரூர் விஷயம் தொடர்பாக நான் எதுவும் பேசவில்லை என தெரிவித்தார். மோடிக்கும், சசி தரூருக்கும் உள்ள விவகாரம் தொடர்பாக ஐ.பி.எல்., அணிக்கும் இடையே உள்ள பிரச்னைகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எந்த மாதிரியானதாக இருந்தாலும் பேசி தீர்க்கப்படும் என்றார். வெளியுறவு துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணாவும் சோனியாவை சந்தித்து பேசினார்.

சசி தரூர் என்ன சொல்கிறார் : இந்த பிரச்னை குறித்து சசிதரூர் இன்று ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். கொச்சி அணி ஏலம் எடுத்தவர்களுக்கு ஊக்கமும், ஆதரவும் தெரிவித்தேன். ரெடண்டஸ்வாஸ் நிறுவனத்தில் யார் இருக்கிறார் என்று எனக்கு தெரியும் . ஆனால் அவர்கள் எல்லோரையும் நான் சந்தித்ததில்லை. ஆலோசனை வழங்குமாறு என்னிடம் கேட்டிருந்தனர். கேரளா என்ற காரணத்தினால் நான் வழிநடத்தி சென்றேன் . சுனாந்தா புஷ்கர் எனக்கு நன்றாக தெரியும். நான் எவ்வித பிஸ்னஸ்சிலும் தலையிடுவதில்லை. நான் போனில் பேசினேன் என்பதும் தவறு . எனக்கு தேவையானவை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமணம் தள்ளிப்போகும் ! : சசி தரூர் அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சையில் மாட்டிக்கொள்வார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாதாரண வகுப்பு விமானத்தில் பயணிக்க வேண்டும் என பிரதமர் அலுவலக சிக்கன நடவடிக்கையை எதிர்த்து மாட்டுத்தொழுவம் என்றார். காந்தி ஜெயந்திக்கு லீவு தேவையா என்றார். இது போன்றவை தொடர்பாக சோனியா வரை சென்று சமரசம் செய்யப்பட்டது. தற்போது சசிதரூர் 3 வது திருமணம் செய்யவிருக்கும் சுனந்தாபுஷ்கர், ரெண்டஸ்வாஸ் நிறுவனத்தில் இருப்பதால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்த பின்னர் தான் 3 வது திருமணத்தை பற்றி யோசிக்க வேண்டும். திருமணம் தள்ளிப்போகும் !

அமைச்சரவையிலிருந்து சசிதரூரை நீக்க வேண்டும் : பா.ஜ., : இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், சசிதரூரை பதவியில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர் , இந்த விவகாரத்தில் சசிதரூர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறினார்.

சசிதரூர் விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது : காங்கிரஸ் அறிவிப்பு : ஐ.பி.எல்., கொச்சி அணி சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் சசிதரூர் விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஜனார்த்தன் திரிவேதி கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக சசிதரூர் தனது நிலையை குறித்து விளக்கம் அளிப்பார் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment