Thursday, April 15, 2010

மூணாறில் கோடையில் பனிமூட்டம் : சுற்றுலா பயணிகள் வருகை குறைவு




மூணாறு:மூணாறில் கடந்த 2 தினங்களாக பனிமூட்டமாகவும், சாரல் மழை அடிக்கடி பெய்தும் வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தேயிலை நகரம் என்றழைக்கப்படும் மூணாறு, கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நவம்பர் முதல் ஜனவரி வரை கடும் குளிர் நிலவும். அந்தகாலக்கட்டத்தில் தட்பவெப்பநிலை மைனஸ் டிகிரியாக இருக்கும். பிப்ரவரி முதல் மே மாதம் முதல் இளவேனில் காலத்தில் 20 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். குறைந்தபட்சம் 10 டிகிரியாக இருக்கும். மற்ற இடங்களில் அதிகப்பட்ச வெயில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவர்.ஜூன் முதல் அக்டோபர் வரை மழை காலமாகும். இந்த சீசனில் தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் பெய்யும். இப்பகுதியில் வருடந்தோறும் இக்காலகட்டத்தில் சராசரி 450 முதல் 500 மிமீ அளவிற்கு மழையளவு பதிவாகும். தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டிவருகிறது. சில இடங்களில் கோடை மழை பெய்கிறது. கோடைகாலத்தை இதமாக கழிக்க மூணாறு போன்ற சுற்றுலா இடங்களுக்கு அதிகப்படியான பயணிகள் அதிகமாக வருவர்.
ஆனால், இந்தாண்டில் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. கடந்த 2 நாட்களாக மூணாறில் மதியம் 2 மணிக்கு பிறகு பனிமூட்டமாக உள்ளது. அடிக்கடி சாரல் மழையும் பெய்து வருகிறது. இதமான சூழ்நிலை நிலவியபோதும் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
இதுகுறித்து டிராவல்ஸ் நிறுவன பணியாளர் ஜோன்ஸ் கூறுகையில், ‘‘பொதுவாக மூணாறில் மழை காலம் துவங்கி விட்டால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிடும். வியாபாரமும் மந்தமாக நடக்கும். கோடை துவங்கினால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர். வியாபாரம் அமோகமாக இருக்கும். சுற்றுலா வாகனங்களும் இடைவிடாமல் சென்று வரும். ஆனால், இந்தாண்டு இதமான சூழ்நிலை நிலவுகிறது. எதிர்பார்த்த அளவிற்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை,’’என்றார்.

No comments:

Post a Comment