Saturday, June 5, 2010

அரசு தொழில் துறையும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றன. இந்த சர்க்கரை ஆலைகள் நவீனமயம் ஆக்குகின்றன.

இந்த திட்டங்கள் ரூ.1125.63 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னை கோட்டையில் இருந்தவாறு வீடியோகான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் மூலம் மின்சாரம் தயாரித்திடும் இணைமின் திட்டங்களை உருவாக்கிட இந்த அரசு ஊக்கமளித்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலன் கருதியும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து முழு அரைவைத் திறனுடன் இயங்கிட ஏதுவாகவும் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக் கொள்முதல் விலையாக இந்த ஆண்டில் டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் நிதிநிலையை மேம்படுத்திட கரும்பின் துணைப்பொருள்களில் ஒன்றாகிய கரும்புச்சக்கையில் இருந்து மின்சாரம் தயாரித்திட அரசு முடிவெடுத்தது.

அதன் அடிப்படையில், தற்போது 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 849 கோடியே 36 லட்ச ரூபாய் செலவில் இணை மின் உற்பத்தி செய்யும் திட்டம், 276 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் கரும்பு ஆலைகளிலுள்ள எந்திரங்களை நவீன மயமாக்கிடும் திட்டம் என மொத்தம் 1,125 கோடியே 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாகத் தொடங்கி வைக்கப்படுகின்றன.

இத்திட்டங்கள் அனைத்தும் இந்த 12 கரும்பு ஆலைகளையும் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

18 மாதங்களில் நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டங்களின் வாயிலாக சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குக் கிடைக்கும்.

இத்திட்டத்தின் மூலம், சர்க்கரை ஆலைகளும் ஏறத்தாழ ஒரு லட்சம் கரும்பு விவசாயிகளும், மின்சாரத்தை நுகர்வோரும் மிகுந்த பயனடைவார்கள். ஏறத்தாழ 1,200 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் பலனாக தயாரிக்கப்படும் 183 மெகாவாட் மின்சாரத்தில், சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான 63 மெகாவாட் மின்சாரம் போக மீதம் உள்ள 120 மெகாவாட் மின்சாரம் நாம் பயன்படுத்திக் கொள்கிற வகையிலே உதவும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவதில் பங்கெடுத்துக் கொள்ளும் சர்க்கரை ஆலை நிறுவனங்களையும், இத்திட்டத்திற்கு உறுதுணையாக விளங்கும் அமைச்சர் பெருமக்களையும் அதிகாரிகளையும் உளமாரப் பாராட்டுகிறேன்.

இன்று தொடங்கி வைக்கப்படும் இந்த இணை மின் திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி உரியகாலத்தில், மின் உற்பத்தியில் ஈடுபட்டுப் பயனளித்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

தமிழகத்தின் மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் கூடுதல் மின் உற்பத்திக்குத் திட்டமிடப்பட்டுள்ள இப்பணிகள் அனைத்தும் விரைவாகவும், சிறப்பாகவும் நிறைவேறி தமிழக மக்கள் பயன்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், தலைமை செயலாளர் ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதே நேரத்தில் நாமக்கல், விழுப்புரம், மதுரை, தஞ்சை ஆகிய இடங்களிலும் நிகழ்ச்சி நடந்தது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதி நிதிகள் பேசினார்கள். முன்னதாக தொழில் துறை முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வரவேற்றார். சர்க்கரை ஆலை ஆணையர் (பொறுப்பு) அதுல் ஆனந்த் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தலைவர் சி.பி. சிங் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment