Monday, June 7, 2010

திருமணம் செய்வதாக சொல்லி 12 பெண்களை மயக்கி மோசடி: ரூ.8 லட்சம் பணம் பறித்த வாலிபர் சென்னையில் சிக்கினார்

ஆலந்தூர், ஜூன். 7-







சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவக் கல்லூரியில் பேராசிரியை ஆக வேலை பார்த்து வருபவர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 38 வயதான அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. வயதாகி விட்டதால் அதற்கேற்ப மணமகன் தேடிக் கொண்டிருந்தார்.






இரண்டு மாதத்துக்கு முன்பு பேராசிரியை சுமதியின் செல்போனில் ஒரு வாலிபர் தொடர்பு கொண்டு பேசினார். 35 வயதுக்கு மேற்பட்ட பெண் அல்லது விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதை தன் வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பதாக கூறினார். உங்களை பார்த்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறினார்.






சுமதி அவரைப் பற்றி விசாரித்தபோது தங்க நகைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாக கூறினார். சுமார் ஒரு மாதம் அவர்கள் போனில் பேசியபடி இருந்தனர். சமீபத்தில் அவர், உங்கள் வீடு அருகே ஒரு வேலையாக வந்தேன். உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா என்றார்.






சுமதியும், சரி வாருங்கள் என்றார். இதையடுத்து சுமதி வீட்டுக்கு சென்று உருக, உருக பேசினார். அவரது பேச்சில் சுமதி மயங்கிப் போனார்.






இந்த நிலையில் திடீரென ஒருநாள் அந்த வாலிபர் பதற்றத்துடன் சுமதி வீட்டுக்கு வந்தார். என் நண்பனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருக்கிறேன். என்னிடம் ரூ. 1 லட்சம்தான் உள்ளது. நீங்கள் ரூ. 2 லட்சம் தாருங்கள். பிறகு தந்து விடுகிறேன் என்றார்.






இதை உண்மை என்று சுமதி நம்பிவிட்டார். எப்படியோ ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் புரட்டி அந்த வாலிபரிடம் கொடுத்தார். பணத்துடன் போனவர், போன வர்தான். பிறகு சுமதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.






சுமதி பல தடவை அவரிடம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த வாலிபர் போனை எடுக்கவே இல்லை. அதன் பிறகே தன்னை மர்ம நபர் நூதன முறையில் ஏமாற்றி விட்டதை சுமதி உணர்ந்தார். இதுபற்றி அவர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்தார்.






அதன் பேரில் அந்த வாலிபரை “பொறி” வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மங்களலட்சுமி, அந்த மர்ம நபரின் செல்போனில் தொடர்பு கொண்டார்.






மர்ம நபர் போனை எடுத்ததும் சதீஷ் இருக்கிறாரா? என்று சப்- இன்ஸ்பெக்டர் மங்களலட்சுமி கேட்டார். பிறகு, அய்யோ சாரி சார் என் பிரண்ட் சதீஷ் நம்பர்னு தப்பா போட்டுட்டேன்... சாரி என்றபடி அவர் போனை வைத்து விட்டார். போனில் பெண் குரலை கேட்டதும் சபலம் அடைந்த அந்த நபர் சப்-இன்ஸ்பெக்டர் மங்களலட்சுமிக்கு போன் செய்து, நான் சதீஷ் நண்பன்தான்.. என்ன விஷயம் சொல்லுங்க? என்றார்.






உடனே மங்களலட்சுமி, எனக்கு 36 வயதாகிறது. அதற்கு ஏற்ப மணமகன் பார்க்கும்படி கூறியிருந்தேன். அது பற்றித்தான் பேச வேண்டும் என்றார்.






இதைக் கேட்டதும் அந்த வாலிபர் உற்சாகமானார். மேடம் நானும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை மணப்பது என்ற குறிக்கோளில் இருக்கிறேன். நீங்கள் விரும்பினால், உங்களை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்றார்.






உடனே மங்களலட்சுமி அந்த வாலிபரை பரங்கிமலையில் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வரச் சொன்னார். அதை நம்பி அந்த வாலிபர் அங்கு வந்தார். ஏற்கனவே மாறுவேடத்தில் அங்கிருந்த போலீசார் அந்த மர்ம நபரை முற்றுகையிட்டு மடக்கிப் பிடித்தனர்.






போலீசார் அவரை தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்று தெரிய வந்தது. 34 வயதாகும் இவரது வேலையே திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை குறி வைத்து மயக்கி ஏமாற்றி பணம் பறிப்பதுதான்.






நாளிதழ்களில் வெளியாகும் மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்து, அதில் விவாகரத்து ஆனவர்கள், விதவைகள் யார் என்று பார்த்து இவர் கைவரிசை காட்டியுள்ளார். ஆவடியைச் சேர்ந்த விதவை பெண் ரமா, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சிந்தியா, பெங்களூரில் வசிக்கும் கனகா உள்பட 12 பெண்களை இவர் மயக்கி ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.






12 பெண்களிடமும் இவர் ரூ. 8 லட்சத்துக்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. 12 பெண்களில் ஒருவரை கூட இவர் திருமணம் செய்யவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக இந்த நூதன கொள்ளையனிடம் இருந்து 12 பெண்களும் தப்பியுள்ளனர்.






ரவிச்சந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment