சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதன் முறையாக மாவட்ட, நகர, ஒன்றிய வாரியாக ஜாதி ஓட்டுகள் மற்றும் சிறுபான்மை ஓட்டுகள் குறித்த துல்லிய கணக்கெடுப்பை நடத்த தி.மு.க., நிர்வாகிகளுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக அச்சிடப்பட்ட படிவஙகள் மாவட்ட நிர்வாகிகளுக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் அடுத்தாண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 1991 சட்டசபை தேர்தல் முதல், ஜாதி ரீதியான அமைப்புகள் அரசியல் கட்சியாக உருப்பெற்று தேர்தலில் போட்டியிடத் துவங்கியுள்ளன. வரும் சட்டசபை தேர்தலை குறிவைத்து பல ஜாதி அமைப்புகள், அரசியல் கட்சியாக அவதாரம் எடுக்கத் துவங்கியுள்ளன. 1991க்கு பிறகு தமிழகத்தில் தொடர்ந்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், சட்டசபை தேர்தலில் தொடர் வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் மாறி மாறித்தான் வெற்றி பெற்றுள்ளன. 2006 சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டிக்கும் குறைந்த இடங்களை பெற்ற தி.மு.க., முதன் முதன்முறையாக காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. வரும் சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.க., மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.
முதல் கட்டமாக மாநிலத்தில் சீரமைக்கப்பட்டுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் அடங்கியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் படி, ஜாதி, சிறுபான்மை ரீதியாக உள்ள ஓட்டுகள் பற்றி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க., நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தி.மு.க., மேலிடத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள பிரத்யேக விண்ணப்ப படிவங்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு சென்னையில் இருந்து வந்துள்ளன. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி விவரம், ஓட்டுச்சாவடி எண், பாகம் எண், மொத்த வாக்காளர்கள், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள், ஜாதி ரீதியாக உள்ள வாக்காளர்கள் எண்ணிகை (சதவீத கணக்கில்) ஆகிய விபரங்கள் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய, நகர, கிளை வாரியாக சிறுபான்மை மற்றும் ஜாதி ரீதியாக உள்ள ஓட்டுகள் குறித்து துல்லியமான விவரங்களை வீடு வீடாக சென்று தி.மு.க., நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலிடத்துக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு தி.மு.க., மேலிடம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்ட சபைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என்பது குறித்து உளவுத்துறை போலீசார் ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக வாக்காளர் பற்றிய புள்ளி விவரங்களை அவர்கள் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் வைத்து, தே.மு.தி.க., மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளை தனி அணியாகவும் வைத்து, கடந்த எம்.பி., தேர்தலில் சட்டசபைத் தொகுதிவாரியாக அவர்கள் பெற்ற ஓட்டுகள், ஓட்டு சதவீதம் ஆகியவற்றையும், சட்டசபைத் தொகுதியின் மொத்த ஓட்டுகள் (மறுவரையறுக்கப்பட்ட தொகுதி வாரியாக) ஆகியவற்றையும் உளவுத்துறை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.
"ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ஜாதிரீதியாக எவ்வளவு வாக்காளர் உள்ளனர்?' என்பதையும், அவர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பார்களா, தொகுதியில் ஆளுங்கட்சிக்கு சாதக, பாதக சூழ்நிலை என்ன என்ற புள்ளி விவரங்களையும் உளவுத்துறை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்ட அரசு திட்டங்களில் எவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை? என்றும், அங்குள்ள தேவைப்படும் அவசர அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்தும் விவரங்கள் உளவுத்துறை போலீஸ் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
THANKS FOR DINAMALAR
No comments:
Post a Comment