புதுடெல்லி, ஜன. 4 -
உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி 2001- ம் ஆண்டு முதல் நடைபெற்ற தொலை தொடர்பு சம்பந்தமான ஒப்பந்தங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதில் குற்றவாளிகள் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.
குற்றவாளிகளின் பெயர் தெரியாததால் அடையாளமற்றவர் என்ற பெயரில் இன்று முதல்கட்ட விசாரணையை சி.பி.ஐ. பதிவு செய்தது. ஒப்பந்தங்களின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அப்போதிருந்த வாஜ்பாயின் அரசில், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்றும் விசாரிப்பதாக சி.பி.ஐ. வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரமோத் மகாஜன், அருண் சௌரி, தயாநிதி மாறன் ஆகிய முன்னாள் தகவல் தொலை தொடர்பு அமைச்சர்கள் நடத்திய சந்திப்புகள், ஒப்பந்தக் கூட்டங்கள் ஆகியவற்றையும் சி.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது.
கோப்புகளில் உள்ள ஆவணப்படி, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 50 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாரதி, வோடபோன், ஐடியா ஆகிய ஒப்பந்ததாரர்கள் அதிக பயனை அடைந்துள்ளனர். ஒப்பந்தங்கள் பெற்ற 50 நிறுவனங்களையும் விசாரிக்கப்போவதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
டிசம்பர் 16- ந் தேதி உச்சநீதிமன்றம் 2001 - 2007 வரை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் யார் யாருக்கு ஒப்பந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை வருகிற பிப்ரவரி 10- ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ.க்கு ஆணை பிரப்பித்துள்ளது. மேலும் தொலை தொடர்பு ஒப்பந்தங்களால் ஏற்பட்ட இழப்பையும் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் சி.பி.ஐ. தன் விசாரணையை வேகப்படுத்தியுள்ளது.
இதுபற்றி முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் அருண் சௌரி கூறுகையில்: உச்சநீதிமன்றம் ஏன் விசாரணையை 2001 வரை நீடித்துள்ளது என்று குழப்பமாக உள்ளது என தெரிவித்தார்.
அருண் சௌரி பா.ஜனதா ஆட்சியில் 2003 ஜனவரி முதல் 2004 மே மாதம் வரை தகவல் தொலை தொடர்பு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment