கவுகாத்தி, ஜன.9-
மத்திய மந்திரி கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி கூறிய கருத்து சரியல்ல. அவர் தணிக்கை அறிக்கையை கவனமாக படித்திருக்க வேண்டும் என்று பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதுபற்றி மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி கபில் சிபல் நேற்றுமுன்தினம் பேட்டி அளித்தார்.
அப்போது, தணிக்கை அதிகாரியின் மதிப்பீட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், யூகத்தின் அடிப்படையிலான அவரது மதிப்பீடு முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரணை நடத்தி வரும் பொது கணக்கு குழுவின் தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷியிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர். அதற்கு ஜோஷி கூறியதாவது:-
கபில்சிபல் கூறிய கருத்து சரியல்ல. அவர் தணிக்கை அறிக்கையை மிகவும் சாதாரணமாக அணுகி இருக்கிறார். அவர் அந்த அறிக்கையை கவனமாக படித்திருக்க வேண்டும். தணிக்கை அதிகாரி, 3 விதமான வழிமுறைகளில் நஷ்டத்தை மதிப்பிட்டு இருக்கிறார். அதில் ஒன்றுதான், ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி. அதுதான் துல்லியமானது, இறுதியானது என்று தணிக்கை அதிகாரி சொல்லவில்லை. இழப்புத்தொகை, யூகத்தில் அடிப்படையிலானது என்றுதான் அவர் எப்போதும் கூறி வந்திருக்கிறார்.
பொது கணக்கு குழு முன்பு, தொலைத்தொடர்பு செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆஜரானபோது, தணிக்கை அதிகாரியின் மதிப்பீடு தவறானது என்று ஒருபோதும் சொல்லவில்லை. பொது கணக்கு குழு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, கபில் சிபல் இதுபோல சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல. அவர் ஏதாவது சொல்ல விரும்பினால், தொலைத்தொடர்பு செயலாளரை பொது கணக்கு குழுவுக்கு அனுப்பி வைத்து, அவர் மூலமாக சொல்லலாம். கபில் சிபலின் கட்சியான காங்கிரசும் தனது கருத்துகளை பொது கணக்கு குழுவிடம் சொல்லலாம்.
இவ்வாறு ஜோஷி கூறினார்.
No comments:
Post a Comment