Sunday, January 9, 2011

ஆட்சி அமைந்தால் வேலிகள் தூள் தூள்: ஜெ.,தேர்தல் முழக்கம்

நாகர்கோவில் : ""தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட, அய்யா வழி பக்தர்கள் துணை நிற்க வேண்டும்,'' என, கன்னியாகுமரி சாமித் தோப்பில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்து காரில் சாமித் தோப்பு வந்த ஜெ.,க்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. கோவிலின் பள்ளியறையில் சாமி தரிசனம் செய்தார்.அங்கு, அவருக்கு வழங்கப்பட்ட நாமத்தை நெற்றியில் பூசிக்கொண்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், கொடிமரம் முன் நின்று வழிபட்டார். கோவிலில் கோசாலையை துவக்கி வைத்து பசு, கன்றுக் குட்டியை தானமாக வழங்கினார். அவற்றிற்கு வாழைப்பழங்களை கொடுத்தார்.

பின்னர், மேடையில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், நிதியுதவிகளை உதவிகளை வழங்கி பேசியதாவது: விண்ணுலகும், மண்ணுலகும் வியக்கும் வகையில் அவதரித்தவர் அய்யா வைகுண்டர் பதி. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னையே அர்ப்பணித்த வைகுண்டபதிக்கு என்னை அழைத்த தலைமை குரு பாலபிரஜாபதிஅடிகளாருக்கு நன்றி.தீண்டாமையை வேரோடு ஒழிக்கவும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை மக்களுக்கு உணர்த்தவும், சமபந்தியை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவரும், சுயமரியாதைக்கு வித்திட்டவரும், சமூக நீதிக்காக போராடியவரும், தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அற்புதமான மார்க்கத்தை ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்டர். அவரை தமிழ் சமூகம் என்றென்றும் நினைவு கூறும். அய்யா வழி வழிபாட்டில் உருவம் கிடையாது. கண்ணாடி மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். கண்ணாடியில் தூசு படிந்தால் நமது பிம்பம் பிரதிபலிக்காது. அதே போல பொது வாழ்க்கையில் தூசுபடியாமல் தூய்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு யுகத்திலும் அதர்மம் தலை தூக்கி, தர்மம் குன்றும் போது அவதார புருஷர்களாக, இறைவன் தோன்றுவது வழக்கம்.அதைப் போல, இந்த கலியுகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டவே அவதரித்தவர், அய்யா வைகுண்டர். தர்மம் என்றால் அறம் என்று பொருள். பிறருக்கு உதவும் மனித நேயத்தை விதைத்தவர் அவர். ஆனால், நாட்டு மக்களை சுரண்டி சேர்த்தப் பணத்தில், தம் வாழ் நாளில் ஒரு விழுக்காட்டை கூட கொடுக்க மனமில்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு பன்றி, ஒரு பசுவிடம் நியாயம் கேட்டது. "என்னை கொன்று இறைச்சியை உண்கிறார்கள். ஆனால், உயிரோடு இருக்கும் போது என்னை புறக்கணிக்கிறார்கள். உன்னை மட்டும் வழிபடுகிறார்களே', என கேட்டது.அதற்கு பசு,"எனக்கும் உனக்கும் வேறுபாடு உள்ளது. நான் உயிரோடு இருக்கும் போது மக்களுக்கு பால், தயிர்,வெண்ணெய் வழங்குகிறேன். நீ செத்த பிறகு தான் இறைச்சி தருகிறாய்,' என கூறியது. செய்யும் தர்மத்தை உயிருடன் இருக்கும் போதே செய்ய வேண்டும்.இன்றைக்கு கொலை, கொள்ளை, சுரண்டல், கற்பழிப்பு, சூழ்ச்சி போன்ற இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, தர்மத்தை நிலை நாட்ட எனக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். மீண்டும் கழக ஆட்சி அமைய துணை நில்லுங்கள்.அய்யா வைகுண்டபதியின் நிலம் வேலியிடப்பட்டிருப்பதாக, பால பிராஜபதி அடிகள் தெரிவித்தார். அய்யா வைகுண்டரின் அருளால் கழக ஆட்சி அமைந்தால், எல்லா வேலிகளும் தகர்த்தெறியப்படும். இந்த தேர்தல் நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கும் தேர்தல். வைகுண்டர் அருளால் கழக ஆட்சிஅமைந்தால், மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

No comments:

Post a Comment